ஆறுதல்

கண்ணீரே காணாது கவலைகள் இன்றி நான்
சுற்றித் திரிந்த நாட்கள் இனி இல்லை.
கள்ளங் கபடம் ஏதும் இன்றி நான்
சிரித்துப் பேசிய நிமிடங்கள் இனி இல்லை.

தத்தித் தடுமாறி தவழ்ந்த அந்நினைவெல்லாம்
எப்போதும் நினைவில் வந்ததாய் நினைவில்லை.
வருவார் போவாரெலாம் தூக்கிக் கொஞ்சிய
அழகிய முகமும் அழகாய் இனி இல்லை.

ஓடிப் பிடித்து ஆடிய நண்பர்கள்
கூப்பிடும் தூரத்தில் இப்போது இங்கில்லை.
உடன் விளையாடிய நண்பர்களுக்கும் எனக்காண
நேரம் என்பதே ஒருபோதும் வரவில்லை.

கீழே விழுந்து மண்ணில் புரண்டு
முழங்கை முட்டி அனைத்தும் சிராய்த்து
பீறிட்ட ரத்தத்தில் கைப்பிடி மண்தூவி
மகிழ்ச்சியாய்ச் செலவிட்ட நிமிடங்கள் இனி இல்லை.

நாளொரு ஊர்சென்று பலரையும் சந்தித்து
பணமீட்டிப் பொருள் சேர்க்கும் புத்தியும் இருந்தாலும்
ஆளுக்கொரு தூண்கொண்டு அகமகிழ்ந்த அந்நாட்கள்
அழுது புரண்டாலும் வரப்போவதும் இல்லை.

'இது தான் வாழ்க்கை, மறுப்பதற்கே இல்லை'
என்றொரு பக்குவம் ஒருபக்கம் இருந்தாலும்
மனதொன்று படைத்த மானுடனாய்ப் பிறந்தமையால்
எழுதிப் புலம்புவதும் ஓர்வகை ஆறுதலே!

- ..ராகவன்.

Comments

bhaaradwaaj ramakrishnan said…
machi seriously tear drops da.....

Popular posts from this blog

Valentine's Die.

வேண்டாம் மைத்துனா வேண்டாம்!

A Tamilian's Tribute to an Apple