தோழி!

கைவிரல் பட்டதும் நெஞ்சிலே ஓர்நொடி
ஆழிப் பேரலை வருவதேன தோழி!
கைப்பேசியில் நீ அழைத்திடும் போதெலாம்
உள்ளம் ஓர்முறை பதைப்பதேன் தோழி!

பேருந்திருக்கையில் நீ அமர்ந்திருக்கையில்
ஜன்னல் வழியுலகம் கண்டுதான் ரசிக்கையில்
ரசித்திடும் கண்களின் கண்ணிமை மையினைக்
கண்டுதான் என்மனம் பூரிப்பதேன் தோழி!

தடுமாறும் போல்செல்ல உன்கரம் பிடித்ததும்
ஏதும் ஏற்படாது நீ சென்று விடுகையில்
தீ-வலம் வருவார்போல் நான் கட்டும் கோட்டைகள்
எண்ணிக்கை எடுத்துரைக்க வயதில்லை தோழி!

நாளொன்று போனதும் நிசியெலாம் நான்காணும்
கனவுகள முழுவதும் நீ வந்திருந்தாலும்
அருகில் அமர அங்கில்லை என்றதுமே
அலைகள் யாவும் அனல்களடி தோழி!

இவ்வாறு நான்கொண்ட குமுறல்கள் ஓர்புறம்
மண்டிப் புதைந்து மண்ணாகிப் போனதும்
மந்திரம் இட்டார்போல் மனமோ இன்றிங்கு
வேறெதோ வேலைகள் விரும்புதடி தோழி!

மணமகன் அறைக்குள் மாந்தர்பல சிரிக்கையில்
மனமதன் மாற்றத்தை நான் புரிந்திருக்கையில்
ஒருகணம் உன்னிடம் வாய்திறக்கக் கோரி
மறுமனம் கூற என் செய்வேன் காதலியே!

வந்தவன் வழிவிட்டுப் போனதும் வழியின்றி
வந்தென்னை வாழ்க்கைத் துணையாக்கிக் கொள்வாயா?
வெறுப்பில் வெகுநாட்கள் விழிமூடி வாழ்ந்துதான்
வேறொரு வலியோனின் வழிசென்று விடுவாயா?

வேகத்தில் வாய்வந்து வார்த்தைகள் விட்டிடவும்
வாழ்நாள் முழுவதையும் வாட்டத்தில் வடித்திடவும்
மனமின்றி, மணமக்கள் மணப்பதை மாண்புடனே
பூத்தூவி வாழ்த்தியே வந்தவழி விடைபெறுகிறேன்!

தோழி!

Comments

Popular posts from this blog

A Tamilian's Tribute to an Apple

Day 3 - 16th Dec. 2012

Day 2 - 16th Dec. 2012 - I