மண்ணின் மடமை

இது, ஒரு முழுதும்-பக்குவமடையாச் சிறுவனின் சினமே தவிர, வேரொன்றும் பெரிதல்ல. மேலும், இதில் காணும், சாதி-மதம்-சார்ந்த எண்ணங்கள் ஓர் உபமானத்துக்காகவே தவிர, முழுதும் உண்மையும் அல்ல.


மண்ணின் மடமை 


கல்லுளத்தார் உலகத்தில் கனியுளத்தான் நான் உளனேன் ?
மண்ணுளார்ச் சமூகத்தில் மனமுடையான் நான் தவிப்பதுவேன் ?
செல்வந்தர் ஆட்சிதனில் செவியுடையான் நான் சாவதுவேன் ?
அநீதியே அறமாதலின் அன்புடையான் நான் அரிவதுமேன் ?

வையத்து வாழ்க்கை வாளினாலே யாயின்
வெண்சாமரம் கொண்ட தெய்வங்களேன் ?
இரத்தம் இலாததோரிரவு மில்லையேல்
இரக்கம் இருக்கும் இதயங்களேன் ?

உணவும் உடையும் உறக்கமும் இல்லையெனில்
உடுக்கை அடிப்பார் உளரல்களேன் ?
பசியும் பட்டினியும் பாருடைமை யாயின்
பாஞ்சசன்னியத்தான் பாசுரம் ஏன் ?

கண்ணீர் இடுக்கில் கண்கள் காண்கையில்
கல்லில் குடிகொண்ட கடவுள்களேன் ?
வேர்களும் வலிமை இழந்தே யிருக்க
வெற்றுக் காகித வேதங்களேன் ?

கைப்பிடிச் சோறும் கண்ணில் படாது
கோபுரக் கலசம் களிப்பதுமேன் ?
சோறுடைத்திருந்த சோழர்தன் நாடுதனில்
நெல்லுக்கும் நீரிலா திருப்பதுமேன் ?

விண்ணெலாம் விரிந்த வள்ளுவன் வாக்குமே
வானில் வறண்டு வீழ்வதுமேன் ?
சங்கச் சமூகம் சாதித்திருந்ததைச்
சாதி சுருட்டிச் சுழல்வதுமேன் ?

தங்கத் தமிழ்கண்ட தரணியும் தனது
தலையை தாழ்த்தித் திகழ்வதுமேன் ?
அகத்தியன் தான்தந்த அருமைச் சமூகம்
சிற்றறிவு மிலாது சீரழிவதேன் ?

பின்னர் பிறார் பார்ப்பர் என்று
எளியோன் எளிதில் எறியாதே !
மஞ்சமே கண்டு மாய்ந்திடுவோரால்
மறுநாள் மண்ணும் விடியாதே !

-வ.ர.ராகவன்

Comments

Popular posts from this blog

A Tamilian's Tribute to an Apple

Day 3 - 16th Dec. 2012

Day 2 - 16th Dec. 2012 - I